மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட்டது-சரத்துக்கு தமிழக அரசு விளக்கம்
சென்னை: மதுரையில் நடந்த சரத்குமாரின் அ.இ.ச.ம.க. மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட்டதாக உள்துறைச் செயலாளர் மாலதி விளக்கம் அளித்துள்ளார்.
தனது கட்சி மாநாட்டுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு தரவில்லை என முதல்வர் கருணாநிதிக்கு சரத்குமார் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்து மாலதி அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
மதுரையில் 10ம் தேதி நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநாட்டில் போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லை என முதல்வருக்கு நீங்கள் எழுதியிருந்தீர்கள்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுடன் விவாதித்தேன். மதுரையில் மாநாடு நடந்தபோது அங்கு, 2 எஸ்பிக்கள், ஒரு கூடுதல் எஸ்பி, 8 டிஎஸ்பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்ற அந்தஸ்தில் உள்ள 289 போலீசார் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
இதுதவிர, 3 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்ற அந்தஸ்தில் உள்ள 43 போலீசார் மற்றும் 25 ஆயுதக் காவல்படையினர் போக்குவரத்து பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
10 இடங்களில் பிக்கெட்டுகள்' அமைக்கப்பட்டிருந்தன. 10 வாகனங்களில், விபத்துக்களைத் தடுப்பதற்கும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கும், போக்குவரத்தை கையாள்வதற்கும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
இதுதவிர, வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களிலும் போக்குவரத்து போலீசாரும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர். பிப்ரவரி 9 மற்றும் பிப்ரவரி 10 ஆகிய தேதிகளில் மாநாடு நடந்த பகுதியில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதற்கு திருப்தி தெரிவித்து, உங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் மதுரை எஸ்பிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடித நகலும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 9ம் தேதி மாநாட்டு பந்தலை மதுரை எஸ்பி பார்வையிட்டபோது நீங்களும் அங்கு இருந்திருக்கிறீர்கள். நான் மேலே குறிப்பிட்டுள்ள விவரங்கள், மாநாட்டின்போது பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது என்பதை தெளிவாக உணர்த்தும் என்று கூறியுள்ளார் மாலதி.












Click it and Unblock the Notifications