மார்க்சிஸ்ட் மாநாட்டுக்கு தடை கோரும் இந்து மக்கள் கட்சி
சென்னை: கோவையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவையில் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கெடுபிடி வசூல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள், தொழிலதிபர்கள், சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டுக்கு ரூ.30 லட்சம் வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி பற்றி பேசப்போவதாக விளம்பரம் செய்துள்ளனர். ஏற்கனவே கோவை மத சம்பந்தப்பட்ட பதட்டதமான பகுதியாகும். இதில் தேவையில்லாமல் இந்து மதத்தை பற்றி பேசுவார்கள் என அஞ்சுகிறோம். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் மாநாடு 10ம் வகுப்பு தேர்வின் போது நடக்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகீம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications