ரூ. 55 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட்!
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர், 1 என்ற எண்ணுடைய வாகன நம்பர் பிளேட்டை ரூ. 55 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். இது ஒரு உலக சாதனையாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் சயீத் அல் கோரி (25). பெரும் பணக்காரரான இவர், எமிரேட்ஸ் பாலஸ் ஹோட்டலில் நடந்த வாகன எண் பிளேட் ஏலத்தில் கலந்து கொண்டார்.
1 என்ற எண் கொண்ட அந்த பிளேட்டை ஏலத்தில் எடுக்க பலரும் அலை மோதினர். ஆனால் சயீத் அல் கோரி, ரூ. 55 கோடிக்கு அந்த பிளேட்டை ஏலத்தில் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன் மூலம் முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். அது, 5ம் எண் கொண்ட நம்பர் பிளேட் ஏலமாகும். அந்த நம்பர் பிளேட்டை சுமார் ரூ. 26 கோடிக்கு கோரியின் சகோதரரான தலால் அலி முகம்மது கோரி ஏலத்தில் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு எண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகளை ஏலம் விட்டு அதன் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இந்த எண்களுக்கு பெரும் கிராக்கி இருப்பதால் அதை வைத்து ஏன் பணம் சம்பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தால் விளைந்ததுதான் இந்த ஏலமாகும்.
பேசாமல், நம்ம ஊரிலும் கூட பேன்சி எண் நம்பர் பிளேட்டுகளை இப்படி ஏலம் விட்டால் அரசுக்கு அமோக வருவாய் கிடைக்கும்.