திருவள்ளுவர் பல்கலையை துவக்கியது நான்-ஜெயலலிதா
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியிலேயே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏதோ தற்போது தான் திருவள்ளுவர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கி இருப்பது போல் விழா நடத்தியுள்ளார் கருணாநிதி என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2002ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் ஆளுநர் உரையில், சமூக மாற்றத்திற்கு ஒரு தன்னிகரற்ற முன்னோடி முயற்சியாக, ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் உள்ளிட்டவர்களின் பொருளாதார, சமூக மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கொண்ட புதிய பல்கலைக்கழகம் ஒன்று வேலூரில் ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002ம் ஆண்டே துவங்கப்பட்டு, வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறைக்கு சொந்தமான கட்டடங்களில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர் ஆகியோரும் உடனடியாக நியமிக்கப்பட்டு விட்டனர். இப்பல்கலைக் கழகத்தின் கீழ் 57 கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் மற்றும் 10 கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
எனது ஆட்சிக்காலத்திலேயே இந்தப்பல்கலைக் கழகத்திற்கென சொந்த நிலம் வாங்குவதற்காக, வேலூர் வட்டத்தில் உள்ள இறையான்காடு கிராமத்தில் சுமார் 135.06 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்க ஏதுவாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கி அரசு ஆணையும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.
அந்த நிலம் படிப்படியாக வாங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆனால், நான் தொடங்கிய பணியைத் தொடராமல், அதை அப்படியே விட்டுவிட்டு வேறு புதிய இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஆடம்பர விழா நடத்தி, புதிய அடிக்கல்லை நாட்டி, கருணாநிதி ஏதோ புதிதாக தற்போது தான் திருவள்ளுவர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கி இருப்பது போல் விழா நடத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications