தமிழ் கட்டாயம்: தேனான தீர்ப்பு, ஆங்கிலமும் முக்கியம்- ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்துப் பள்ளிக் கூடங்களிலும் முதல் வகுப்பிலிருந்து தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்தச் செய்தி, தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்பத் தேனாக வந்துப் பாய்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்துப் படிக்காமல், தமிழகத்தின் பள்ளிக் கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேறிச் சென்று கொண்டிருக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வந்திருக்கிறது. இதற்காகப் பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது.
கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்தக் கோரிக்கையை, கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றி வைத்ததற்காக நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இனி மெல்லச் சாகும் என்று அந்தப் பேதை உரைத்தாள்' என பாடினார் பாரதி. பாரதி சாடிய அந்தப் பேதையின்' உரைக்குச் சாவு மணி அடிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும். முதல் வகுப்பு முதல் தமிழ் ஒரு கட்டாயப் பாடம் என்ற நடவடிக்கை இதில் முதல் படியாக மட்டுமே அமைய வேண்டும்.
அடுத்ததாக, முதல் வகுப்பில் இருந்து அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழி வழியில் கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இப்படிச் சொல்வதால் ஆங்கிலத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல.
மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரையில் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், பிழையின்றி எழுதவும், தகுந்த பயிற்சியினை அவர்களுக்கு அளிக்கத் தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அதே நேரத்தில் மொழிப் பாடங்களைத் தவிர்த்து இதர பாடங்கள் அனைத்தும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும். தாய் மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படும் போது தான், மாணவர்களின் அறிவுத் திறனும், கல்வியின் தரமும் உயரும். மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள கிராமப்புற மாணவர்கள் அனைத்து நிலையிலும் போட்டி போடும் தகுதியை வளர்த்துக் கொள்ள உதவும்.
மாநில அரசு மேற்கொள்ளும் எந்தவொரு கொள்கை முடிவிலும், நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை என்ற பொதுவான நியதி இந்தத் தீர்ப்பின் மூலமும் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இதை ஆயுதமாகக் கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளை மாநில அரசு தாமதமின்றி
மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications