நில ஆக்கிரமிப்பு: விஜயகாந்த்துக்கு அரசு நோட்டீஸ்!
சென்னை: தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்துக்கு சொந்தமான கேப்டன் பண்ணையில், ஆக்கிரமிப்பட்ட நிலத்திலிருந்து 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் பொதுப்பணித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேவாதூர் கிராமத்தில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கேப்டன் பண்ணை உள்ளது. கிட்டத்தட்ட 402 ஏக்கர் பரப்பளவிலான இந்த பண்ணையின் 38 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகும்.
கோவில் நிலம், அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை விஜயகாந்த் ஆக்கிரமித்துள்ளார் என்று சமீபத்தில் தேவாதூர் கிராம ஊராட்சித் தலைவி மீனா சமீபத்தில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
மேலும் சட்டவிரோதமாக மின்வேலி போடப்பட்டிருப்பதாகவும் கிராம மக்கள் புகார் கூறினர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து மதுராந்தகம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 88 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பட்டிருப்பது நிஜம்தான் எனத் தெரிய வந்துள்ளதாம்.
ஓடைப் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டினர்.
ஆங்காங்கு ஒட்டப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பொதுப்பணித்துறையே ஆக்கிரமிப்பை அகற்றும். அதற்குரிய செலவுகளை உரியவர்கள் கொடுக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.