டிஜிஎஸ் தினகரன் உடல் அடக்கம்
சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதக்ர டிஜிஎஸ் தினகரனின் உடல் நேற்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபல கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் கடந்த 20ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்கள், கிறிஸ்தவ பெருமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2 நாட்களாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்
தினகரனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் தினகரனின் உடல் நல்லடக்கம் நடந்தது. ராயப்பேட்டையிலிருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் தினகரனின் மனைவி ஸ்டெல்லா தினகரன், மகன் பால் தினகரன், பேரன், பேத்திகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதிச் சடங்குக்கு முன்பாக தினகரின் பேரக் குழந்தைகளான சாம், ஷரோன், ஸ்வீட்டி ஆகியோர் தங்களது தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்புப் பாடல்களைப் பாடியது உருக்கமாக இருந்தது.
இறுதிச் சடங்கின்போது பேசிய பால் தினகரன், துயரமான நேரத்தில் எங்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் கருணாநிதிக்கும், பிற அரசியல் தலைவர்களுக்கும், கிறிஸ்தவ போதகர்களுக்கும், பாதிரியார்களுக்கும், பல்துறை, பல் மதப் பிரமுகர்களுக்கும், பொதுமக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
பின்னர் நூற்றுக்கணக்கானோரின் கண்ணீர் மல்கிய இறுதி அஞ்சலியுடன், தினகரனின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது.