இன்று ஜெ. 60வது பிறந்த நாள்-சுவாமி, வைகோ நேரில் வாழ்த்து
1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். இன்று அவருக்கு 60வது பிறந்த நாளாகும். ஜெயலலிதா பிறந்தது மாசி மக நட்சத்திரத்தில். அந்த நட்சத்திரப்படி 22ம் தேதியே ஜெயலலிதாவுக்கு நட்சத்திர பிறந்த நாள் வந்து விட்டது. அன்றைய தினத்திலிருந்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
இன்று ஆங்கில தேதிப்படியான பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், தங்கத் தேர் இழுத்தல், அன்னதானம், இன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத நல்லிணக்க நாள்!!!!!:
அதிமுக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மத நல்லிணக்க நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்காக்களில் திருக்குரானும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பைபிளும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் பகவத் கீதை இலவசமாக தரப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
60 ஜோடிகளுக்கு ஜெ. கல்யாணம்:
பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக ஜெயலலிதா பேரவை சார்பில் சென்னை பூந்தமல்லி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத் திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார். இந்த 60 ஜோடி தவிர, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துச்சாமியின் மகன் உள்பட 5 அதிமுக பிரமுகர்களின் குடும்பத் திருமணத்தையும் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
முதல் திருமணமாக, திமுக அமைப்புச் செயலாளர் எஸ்.முத்துசாமியின் மகன் எம்.ராஜா - கிருத்திகா பெரியநாயகி திருமணத்தையும், தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ தங்கமுத்துவின் மகன் இளமுருகு - கார்த்திகா தேவி திருமணத்தையும், இதைத் தொடர்ந்து கட்சிப் பிரமுகர்கள் 3 பேர் இல்லத் திருமணங்களையும் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
அடுத்து 60 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்துவதற்காக மாபெரும் பந்தலும், மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் வலதுபுறத்தில் 30 ஜோடிகளும், இடதுபுறத்தில் 30 ஜோடிகளும் அமர வைக்கப்பட்டனர்.
மணமகன்களுக்கு தாலியை எடுத்துத் தந்து மணவிழாவை நடத்தி வைத்து அட்சதை தூவி மணமக்களை ஜெயலலிதா வாழ்த்தி னார். குடும்பத்திற்கு தேவையான 60 வகை சீர்பொருட்களை ஒவ்வொரு ஜோடிக்கும் ஜெயலலிதா வழங்கினார்.
இதேபோல, அதிமுக பிரமுகர்கள் குடும்பத்தைச் ேசர்ந்த 5 ஜோடிகளுக்கும் தலா 2 வெள்ளிக்குத்து விளக்குகள் அடங்கிய பரிசுப் பொருட்களை ஜெயலலிதா கொடுத்தார். திருமணத்திற்கு வந்தவர்களை முத்துசாமி வரவேற்றார். விழா முடிவில் ஜெயலலிதா பேரவை செயலாளர் தளவாய் சுந்தரம் நன்றி கூறினார்.