கோவை கோர்ட்டில் 'டுமீல், டுமீல்'!!
கோவை: கோவை சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் காவலர் ஒருவர் துப்பாக்கியை துடைத்தபோது அது எதிர்பாராதவிதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மத்திய சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் உள்ளது. இங்குதான் கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது.
நேற்று இந்த நீதிமன்றத்தில் வேறு சில வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்புக்காக 10 போலீஸார் கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்தனர்.
பகலில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் பிஸ்டலை, தலைமைக் காவலர் நடராஜன் துடைத்தார். அப்போது திடீரென அது வெடித்து குண்டு வெளியே பாய்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பிஸ்டலிலிருந்து பாய்ந்த குண்டு எதிரில் இருந்த சுவரில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் அங்கு இல்லை. இருந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
துப்பாக்கி திடீரென சுட்டதால் கோர்ட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுகுறித்து தலைமைக் காவலரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications