லாரி ஸ்டிரைக்கால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு-காய்கறி விலை கடும் உயர்வு
சென்னை: கர்நாடகத்தில் நடந்து வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டெருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காய்கறி, பழங்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
கர்நாடகத்தில் லாரிகளில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அம் மாநில லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தால் தமிழக லாரிகள் கர்நாடகத்துக்குள் போக முடியவில்லை. இதனால் கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய பொருட்கள் தேங்க ஆரம்பித்துள்ளன.
இதனால் கிட்டத்தட்ட 7,000 லாரிகள் தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய சமையல் எரிவாயு உள்ளிட்ட முக்கிய பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரில் இருந்து வரும் தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், ஆப்பிள் போன்ற காய்-பழ வகைகளின் வரத்தும் முடங்கியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இருந்து வரும் வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவை வரத்தும் தடைபட்டுள்ளது.
இதனால் சமையல் எரிவாயு சிலிண்டெர்களுக்கு தமிழகத்தி்ல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காய்கறிகள், பழங்களின் விலை உயர ஆரம்பித்துவிட்டது.
அதே போல தமிழகத்தில் இருந்து செல்லும் முட்டை, தேங்காய், ஜவுளி, சர்க்கரை, ஜவ்வரிசி, இரும்பு உள்ளிட்ட பொருட்கள் தேங்க ஆரம்பித்துள்ளன.
இதனால் நாளொன்றுக்கு கோடிக்கணக்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 300 கோடியளவிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
கர்நாடகத்தின் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் தமிழகத்துக்கு 200 லாரிகளில் கேஸ் சிலிண்டெர்கள் வருவது நின்றுபோய்விட்டது. இதனால் மதுரை, திருச்சி, சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கேஸ் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்ட்டுகளுக்கு எரிவாயு செல்லவில்லை.
இதனால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிவிட்டது.
லாரி போக்குவரத்து மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வருவாய் ஈட்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் தமிழக லாரி உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பில் பெங்களூர் கால்சென்டர்கள்:
இந் நிலையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கால் டாக்சி, டாக்சி மற்றும் சாப்ட்வேர், பிபிஓ, கால் சென்டர் நிறுவனங்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனங்களுக்கு கர்நாடக அரசு எச்சரி்க்கை விடுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றால் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கால் சென்டர், பிபிஓ நிறுவனங்கள் இயங்க ஊழியர்களை இரவு, பகலாக எந்த நேரத்திலும் பணிக்கு அழைத்து வர வாகனங்கள் மிக மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.