அதிமுகவில் சேர தயாநிதி மாறன் திட்டம்?

திமுகவுக்கும், சன் டிவிக்குமான உறவு முறிந்தது முதல் பெருத்த அமைதி காத்து வருகிறார் தயாநிதி மாறன். எங்கிருக்கிறார் என்பதே தெரியாத வகையில் படு அமைதியாக செயல்பட்டு வருகிறார்.
ஆனால் சன் டிவிக்கும், திமுகவின் கலைஞர் டிவிக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து கொண்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. சன் டிவியின் சுமங்கலி கேபிள் விஷன் ஆபரேட்டர்கள் இதில் காரணமே இல்லாமல் கைது செய்யப்படுவதாக சமீபத்தில் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் தயாநிதி மாறன்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் சேரப் போகிறார் தயாநிதி. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரை சந்திக்க வருகிறார் என செய்தி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது உண்மையாக இருக்கலாமோ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களில், அதிமுகவினர் கொடுத்த ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் பறை சாற்றின. குறிப்பாக ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த பெரிய அளவிலான வாழ்த்து விளம்பரம் முதல் பக்கத்திலேயே வெளியாகியிருந்தது.
வழக்கமாக அதிமுகவினரின் விளம்பரங்கள் இந்த பத்திரிக்கைகளில் இடம் பெறுவதில்லை.
இதனால் தயாநிதி மாறன் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி என்று தயாநிதி மாறன் மறுத்துள்ளார். தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் வந்த விளம்பரங்கள் முற்றிலும் வியாபாரம் சம்பந்தப்பட்டவை என்று மாறன் குடும்பத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஜெயலலிதாவை தயாநிதி மாறன் சந்திக்கப் போகிறார் என்ற தகவல் வெளியான அதே சமயத்தில் அவர் தனது மனைவி, குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு பயணமானதாக ஒரு தகவல் தெரிவித்தது.
தயாநிதி மாறனுக்கும், திமுகவுக்கும் இடையே எந்தத் தொடர்பு இல்லையென்றாலும் கூட அவர் தொடர்ந்து மத்திய சென்னை திமுக எம்.பியாக நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications