சர்தாரி மீதான ஊழல் வழக்குகள் ரத்து!
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் பெனாசிர் பூட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மாலிக் ஆகியோர் மீதான அனைத்து ஊழல் வழக்குகளும் இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.
பெனாசிர் பூட்டோ உயிருடன் இருந்தபோது கடந்த அக்டோபர் மாதம் அதிபர் முஷாரப் ஒரு அவசர சட்டத்தைப் பிரகடனம் செய்தார். அதில், பெனாசிர் பூட்டோ, ஆசிப் அலி சர்தாரி, ரஹ்மான் மாலிக் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெனாசிருக்கும், முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார் முஷாரப்.
ஆனால் இதை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப்பின் தம்பி சபாஷ் ஷெரீப், ஜமாத் இ இஸ்லாமி தலைவர் குவாசி ஹூசேன் அகமது மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், முஷாரப் பிறப்பித்த அவசரச் சட்டம் செல்லும், அதை ரத்து செய்ய முடியாது என்று கூறி இன்று காலை தீர்ப்பளித்தது. 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ஆசிப் அலி சர்தாரி, ரஹ்மான் மாலிக் ஆகியோர் மீது நிலுவையில் இருந்த அனைத்து ஊழல் வழக்குகளையும் பாகிஸ்தான் அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு ரத்து செய்து உத்தரவிட்டது.
சர்தாரியை தனது பக்கம் இழுக்க முஷாரப் தீவிரமாக முயன்று வரும் நிலையில் சர்தாரி மீதான அனைத்து ஊழல் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முஷாரப் பக்கம் சர்தாரி வந்து விட்டதையே இது உணர்த்துவதாக தெரிகிறது.
சமீபத்தில் முஷாரப்பின் தூதர்கள், சர்தாரியை சந்தித்து நவாஸ் ஷெரீப்புடன் கூட்டு சேர வேண்டாம் என்று வலியுறுத்தினர். ஆனால் அதை சர்தாரி ஏற்கவில்லை. இதையடுத்து சுவிஸ் வங்கியில் சர்தாரி பணம் குவித்து வைத்திருக்கும் பல கோடி ரூபாய் ஊழல் வழக்கை தோண்டி எடுக்க முஷாரப் உத்தரவிட்டார்.
இதையடுத்து முஷாரப்புடன் சமாதானமாகப் போக சர்தாரி முடிவு செய்ததாக கூறப்பட்டது. அதனால்தான் ஷெரீப்பை பிரதமராக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், முஷாரப்பை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சர்தாரி மீதான அனைத்து ஊழல் வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விரைவில் பாகிஸ்தான் அரசியலில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சர்தாரி உருவாக்கும் அரசுக்கு வெளியி்ல் இருந்து மட்டுமே ஆதரவு தரப் போவதாக நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். முஷாரப் கையால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அமைச்சர்களாக தங்கள் கட்சி விரும்பவில்லை என்பதால் கூட்டணி அரசில் சேரப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் நவாஸ்.












Click it and Unblock the Notifications