பங்காரு அடிகளார் பிறந்தநாள்-தங்க ரதத்தில் ஊர்வலம்
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மீக குருவான பங்காரு அடிகளாரின் 68வது பிறந்த நாள் விழாவையொட்டி அவர் தங்க ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பங்காரு அடிகளாரின் 68வது பிறந்தநாள் விழா கடந்த 3 நாட்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் வெளிநாட்டு பக்தர்கள் உட்பட 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. விழா மலரை விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட முன்னாள் நீதிபதி தணிகாசலம் பெற்றுக் கொண்டார்.
68வது பிறந்த நாளை கொண்டாடும் பங்காரு அடிகளாரை ஆதிபராசக்தி வேள்விக் குழுவினரும், ஆதிபராசக்தி பாதுகாப்புக் குழுவினரும் அவரது இல்லத்தில் சந்தித்து மரியாதைகள் செய்து அவருக்கு பாத பூஜைகளை செய்தனர்.
நேற்று காலை 8.30 மணியளவில் கடலூர், விழுப்புரம் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் தங்க ரதத்தில் ஏற்றி சித்தர் பீடத்துக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து ஆன்மீக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி இயக்கத்தின் ஆன்மீக பணிகளில் சிறப்புடன் பணியாற்றிய தொண்டர்களுக்கு சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.
நேற்று மாலை 4 மணியளவில் கருவறை முன்பாக நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.
இன்று காலை 9 மணிக்கு தனது தாய், தந்தையர் உருவப் படங்களுக்கு தீபாராதனை காட்டி வணங்கிய பங்காரு அடிகளார் பின்னர் பிறந்த நாள் கேக்கை வெட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு வழங்கினார். ஆதிபராசக்தி பக்தர்கள் சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் வரிசையாக நின்று பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.