சிறை அதிகாரி பங்களாவில் குடி போதையில் கைதிகள் கும்மாளம்
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளரின் பங்களாவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கைதிகள் குடித்து விட்டு கும்மாளமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
சில தினங்களுக்கு முன் பாளை மத்திய சிறை கூடுதல் சிறை கண்காணிப்பாளர் கண்ணன் தன்னுடைய பங்களாவை சுத்தம் செய்யும்மாறு வார்டன்களிடம் கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார்.
இதையடுத்து சிறை வார்டன் பாலசுப்பிரமணியன் 4 கைதிகளை அழைத்துக் கொண்டு பங்களாவுக்கு வந்தார்.
அங்கு அவர்களுடன் சேர்ந்து வார்டன் பாலசுப்பிரமணியனும் தண்ணி அடித்துள்ளார். போதையில் கைதிகளும் அதிகாரிகளும் கும்மாளமிட்டனர்.
சுத்தப்படுத்த வந்த இடத்தை வாந்தி எடுத்து அறைகளை நாறடித்தனர்.
இதனையறிந்த அங்கு வந்த கூடுதல் சிறை கண்காணிப்பாளர் கண்ணன், அவர்களை எச்சரித்து மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தார்.
இதுகுறித்து விசாரனை நடத்துமாறு பாளை சிறை கூடுதல் காண்காணிப்பாளருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து சிறை வார்டன் மற்றும் கைதிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
போதையில் ரகளை செய்த அரசு அதிகாரி கைது:
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் குடி போதையில் ரகளை செய்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம, அனுமந்தன்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி பெரியகுளம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் குடித்துவிட்டுத் தான் வேலைக்கே வருவார். நேற்று காலை 8 மணிக்கு பணிக்கு வரவேண்டியவர் காலதாமதமாக மதியம் 12 மணிக்கு வந்துள்ளார்.
அத்தோடு சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ததோடு ஆபாசமாக திட்டியுள்ளார். இது குறித்து உதவி செயற்பொறியாளர் சுகுமார், காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து ரகளை செய்து கொண்டிருந்த ஆரோக்கிய சாமியை போலீசார் கைது செய்தனர்.