டிவி நடிகை.. போதைப் பொருள்.. கடத்தல்.. பணம் பறித்த இன்ஸ்பெக்டர்
திண்டுக்கல்: டி.வி. நடிகை மூலமாக தொழிலதிபரை மிரட்டி ரூ. 15 லட்சம் பணம் பறிக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த பஷீர் அகமத் (35) திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
நான் சென்னையில் மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். மதுரை அருகேயுள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து இரும்பு பொருட்களை வாங்கி விற்று வருகிறேன். இதற்காக அடிக்கடி மதுரைக்கு சென்று வருவேன்.
கடந்த 22ம் தேதி என் நண்பர்கள் மூலம் எனக்கு பழக்கமான சென்னை வளரசவாக்கத்தை சேர்ந்த டி.வி. நடிகையான பிந்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
தனது கார் பழுதாகி திருச்சி பஸ் நிலையம் அருகே நிற்பதாகவும், திண்டுக்கல்லில் நடக்கும் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
நான் மதுரைக்கு செல்ல இருந்ததால் எனது காரில் திருச்சி சென்றேன். பிந்துவை அழைத்துக் கொண்டு திண்டுக்கல் செல்ல திட்டமிட்டேன்.
திருச்சியில் பிந்துவை சந்தித்தேன். அவரும் அவருடன் இருந்த சத்தியமூர்த்தி என்பவரும் எனது காரில் ஏறிக் கொண்டனர்.
திண்டுக்கல்-திருச்சி ரோட்டில் எங்கள் காரை நிறுத்தி 5 பேர் சோதனை செய்தனர். அவர்கள் தங்களை போலீசார் என்று கூறினர். அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் என்பவர் பிந்துவின் பையை திறந்து பார்த்து வெள்ளை நிறத்தில் உப்பு போன்ற 5 பாக்கெட்டை எடுத்து காட்டினார்.
பின்னர் அவர் அது போதை பொருள் என்றும், அதன் விலை ரூ.4 கோடி என்று கூறினார். இதனை கடத்தியதாக உன் மீது வழக்கு போட்டால் ஜாமீனே கிடையாது என்று என்னை மிரட்டினார்.
பின்பு அவர்கள் பிந்துவை விட்டு விட்டு என்னையும், சத்திய மூர்த்தியையும் பழனி செல்லும் ரோட்டில் ஒரு விடுதி அறையில் அடைத்தனர்.
மறுநாள் சிவா என்பவர் வந்து, துணை எஸ்பியிடம் கூறிவிட்டேன். வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.50 லட்சம் வரை கேட்கிறார். நீ ரூ. 15 லட்சம் மட்டும் தா, ரூ.35 லட்சத்தை சத்தியமூர்த்தி கொடுத்து விடுவார் என்றார்.
மேலும் என்னிடம் இருந்த ரூ.17,000 மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டு விடுவித்தனர்.
சென்னையில் வெங்டேஷ் என்பவரிடம் பணம் கொடுக்குமாறு சத்தியமூர்த்தி கூறினார். என்னவென்றே புரியாமல் சென்னை திரும்பிய என்னை வெங்டேஷ் என்பவர் சந்தித்து, பணம் கேட்டார்.
பணம் தராவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார். எனவே எனக்கு பாதுகாப்பு தர வேண்டும், என்னை மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் போதை மருந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மனுவில் பஷீர் அகமத் கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார்,
வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், பிந்து, சத்தியமூர்த்தி மற்றும் சிவா, வெங்கடேஷ், பெயர் ஆகியோர் மீதும் மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் கைது:
இந்த பணம் பறிப்பு திட்டத்தைப் போட்டதே இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் தான் பிந்து மூலமாக பஷீரை மிரட்டி பணம் பறிக்க திட்டம் போட்டவர் என்றும், சத்தியமூர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் எல்லாம் இவரது செட் அப் ஆட்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அதே போல பிந்துவின் நடவடிக்கைகள் குறித்தும், பஷீர்-பிந்துவுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் தனி விசாரணை நடக்கிறது.