படுத்துக் கொண்டே ஒரு பரீட்சை!
சென்னை: விபத்தில் சிக்கிய 10வது வகுப்பு மாணவி, உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையிலும் அதை நிராகரித்து விட்டு படுத்துக் கொண்டே பரீட்சையை எழுதி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஜீவானந்தம் - மகாலட்சுமி தம்பதியின் மகள் ஷாலினி. 16 வயதாகும் ஷாலினி, 10வது வகுப்பு (சிபிஎஸ்இ) படித்து வருகிறார். தற்போது சிபிஎஸ்இ 10வது வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது.
நேற்று காலை ஷாலினி பரீட்சை எழுதுவதற்காக தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் அரும்பாக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினர்.
இதில் ஷாலினிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல ஜீவானந்தத்திற்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக ஒரு ஆட்டோவைப் பிடித்த ஜீவானந்தம் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு ஷாலினியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரால் பரீட்சைக்குப் போக முடியாது என்று கூறினர். மேலும், உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால் அதை நிராகரித்த ஷாலினி எப்படியாவது நான் பரீட்சை எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக கூறி விட்டார். இதையடுத்து சிபிஎஸ்இ நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஷாலினிக்கு என சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து பள்ளிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார் ஷாலினி. அங்கு அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. அங்கு படுக்கையில் படுத்தபடி தேர்வுக்குத் தயாரானார் ஷாலினி. 9வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ஷாலினி பதிலைச் சொல்ல சொல்ல தேர்வை எழுதினார்.
இப்படியாக தனது உடல் வலியையும் பொருத்துக் கொண்டு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் ஷாலினி. அடுத்த தேர்வு செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அதற்குள் நான் உடல் நலம் சரியாகி விடுவேன். அடுத்தடுத்த பேப்பர்களையும் சிறப்பாக எழுதி முடிப்பேன் என்று உறுதியாக கூறினார் ஷாலினி.
பரீட்சையை முடித்துக் கொண்டு மீண்டும் அப்பல்லோவுக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஷாலினி.
ஷாலினியின் மன உறுதியை ஆசிரியர்களும், மாணவர்களும், டாக்டர்களும் பாராட்டினர்.