போலி பாஸ்போர்ட்-சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கைது
சென்னை: தனது உடல்நலமற்ற தாயாரைப் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பஞ்சாபைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பல்பீர் சிங் (20) என்பவர் நேற்றிரவு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை சோதித்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது.
மலேசியாவில் கட்டடத் தொழிலாளியாக உள்ள இவரது தாயார் ஜலந்தரில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.
அவர்கள் தர மறுக்கவே, ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போர்ட்டை தயார் செய்து இந்தியா வந்துள்ளார்.
இவரைக் கைது செய்த விமான நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.