சர்தாரி பிரதமராக பெனாசிர் கட்சித் தலைவர்கள் ஆதரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக மறைந்த பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிந்து 20 நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு அரசு அமைக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும் இதுதொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றன.
யார் பிரதமர் என்பதில்தான் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான மக்தூம் ஹமீத் பாஹிமே பிரதமராக பொறுப்பேற்கக் கூடும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதுதொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் தாமதித்து வந்ததால் பாஹிம் அதிருப்தி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று நிலைமை தலைகீழாக மாறியது. பாஹிமுக்குப் பதில் சர்தாரியே பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் குரல் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கட்சி பிளவுபடாமல் தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்தாரி பிரதமராகப் பதவியேற்றால், பாஹிமுக்கு நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியையும், அவரது மகனுக்கு பிரதமரின் ஆலோசகர் பதவியையும் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்தாரி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது சர்தாரி எம்.பியாக இல்லை. எம்.பியாக இருந்தால் மட்டுமே பிரதமர் பதவியை வகிக்க முடியும். எனவே அவர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகும் வரை, தனது உறவினர் ஒருவரை இடைக்காலப் பிரதமராக நியமித்து, தேர்தலில் போட்டியிட்டு பின்னர் பிரதமர் பதவிக்கு அவர் வருவார் எனக் கூறப்படுகிறது.