பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி-ஜெயலலிதா
சென்னை: ஆன்றோர்களும், சான்றோர்களும், அரும்புகளும், பள்ளிக்கூடத்து தளிர்களும் கூட பாசத்துடன் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனது பிறந்த நாளை முன்னிட்டு, வற்றாத அன்பால் வாழ்த்துகள் அனுப்பி வரும் வளமார்ந்த நெஞ்சங்கள் அனைத்துக்கும் எனது நன்றி. எனது பிறந்த நாளில் மட்டுமின்றி, பிறந்த நாளை தொடர்ந்து வரும் இத்தனை நாட்களிலும் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன.
கட்சி தொண்டர்களும், அரசியல், கலை, இலக்கியம், ஆன்மீகம் ஆகிய பல்வேறு துறைகளை சார்ந்த பெரு மக்களும், பத்திரிகைத் துறை நண்பர்களும்(!), பொதுமக்களும் ஆர்வமுடன் அனுப்பி வரும் வாழ்த்துக் கடிதங்கள், கவிதைகள், மலர்க் கொத்துகள், பல்வேறு சமயங்களை சார்ந்த வழிபாட்டு தலங்களில் எனக்காக பிரார்த்தனை செய்து அனுப்பி வைக்கும் பிரசாதங்கள்- இவை எல்லாம் என்பால் மக்கள் கொண்டிருக்கும் மாபெரும் அன்புக்கு அடையாளமாக என் இல்லத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
பள்ளிக்கூடத்து தளிர்களும்:
ஆன்றோர்களும், சான்றோர்களும் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களை அனுப்பி வருவதை போலவே, அரும்புகளும், பள்ளிக்கூடத்து தளிர்களும் கூட பாசத்துடன் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்று அருந்தமிழில் பொது மறையை தந்த வள்ளுவப் பெருமான் உரைத்தது எல்லாம் எவ்வளவு உண்மை என்பதை இப்போது நான் நினைத்து பார்க்கிறேன்.
தாயாக இருந்து:
இத்தனை அன்பு நெஞ்சங்களின் பாசத்தையும், பரிவையும், பாராட்டுதல்களையும் பார்க்கும் போது, என் மனம் பரவசப்படுகிறது. தாயை இழந்த எனக்கு தமிழகமே தாயாக இருந்து வாழ்த்துரைப்பதை கண்டு என் விழிகள் கசிகின்றன.
வாழ்த்துகளுக்கு நன்றிக்கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது என்றாலும், மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் வாஞ்சையுள்ள வாழ்த்துகளுக்கும் கட்சித் தொண்டர்கள் ஆற்றி வரும் அற்புத பொதுப்பணிகளுக்கும் எந்த வகையில் நன்றிக்கடன் ஆற்றப் போகின்றோம் என்ற எண்ணமே என் இதயத்தில் மேலோங்கி நிற்கிறது.
பல்வேறு நாடுகளில் இருந்தும்...:
தமிழகம் மட்டும் அல்லாமல், இந்திய திருநாட்டின் ஏனைய மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து வழங்கியுள்ள அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் தனித்தனியே நன்றிக் கடிதம் அனுப்பியது போதாது என்றும், இந்த அறிக்கை வாயிலாகவும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை அனைவருக்கும் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
என் இதயக் கூடையில் எடுத்த இந்த வார்த்தைகள் உங்கள் உள்ளங்களுக்கு வந்து சேரும்போது, உங்கள் அன்புச் சகோதரியின் நன்றி அதில் மணக்க காண்பீர்கள்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த நன்றி அறிவிப்பை விளம்பரமாக சில பத்திரிக்கைகளில் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.