பெட்ரோல் நிலையங்களை மூடும் ரிலையன்ஸ்
மும்பை: அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், அரசு மானியம் இல்லாததாலும், இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், தனது அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் மூட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு வழங்கும் மானியங்களைப் பெறும் நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இல்லை. கச்சா எண்ணெய் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே எங்களால் நஷ்டத்தை சமாளிக்க முடியவில்லை.
நிலைமை கையை மீறிப் போகும் முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக நடத்தி வரும் அனைத்து சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களையும் மூட முடிவு செய்துள்ளோம்.
ஏற்கனவே அனைத்து பெட்ரோல் நிலையங்களும் ஸ்டாக் இல்லாத நிலையில்தான் உள்ளன. எந்த விற்பனை நிலையத்திற்கும் பெட்ரோல் அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். ஸ்டாக் உள்ளவரை விற்பனை நடைபெறும். அதன் பின்னர் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் என்றார் அவர்.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக 1,400 சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை ரிலையன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்தி வருகிறது. சிலவற்றை டீலர்களிடம் விட்டுள்ளனர்.
தற்போது ரிலையன்ஸ் எடுத்துள்ள முடிவு, நேரடியாக அது நடத்தி வரும் விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும். டீலர்கள் வசம் உள்ள பெட்ரோல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.
இந்திய பெட்ரோல் விற்பனை சந்தையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு 14 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ம் ஆண்டு பிற பொதுத்துறை விற்பனை நிலையங்கள் (பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவை) மேற்கொண்ட சராசரி விற்பனையை விட நான்கு மடங்கு அதிக விற்பனையை ரிலையன்ஸ் நிறுவன பெட்ரோல் நிலையங்கள் மேற்கொண்டன.
ஆனால் சமீப காலமாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. ரிலையன்ஸ் நிறுவன பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தரமான, அளவு குறையாத அளவுக்கு சேவை இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இருந்தனர். கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ், பெட்ரோல் நிலையங்களை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களை விட இங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 6ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 14ம் அதிகமாகும். இதன் காரணமாக இங்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.