ஜெயலட்சுமி வழக்கில் சிக்கிய டிஎஸ்பிக்கு மீண்டும் வேலை
நெல்லை: சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் சிக்கி, சஸ்பெண்ட் ஆன டி.எஸ்.பி.ராஜேசகருக்கு மீண்டும் பணி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏட்டு முதல் எஸ்பிவரை பல்வேறு போலீஸ் அதிகாரிகளை தனது வலையில் விழ்த்தி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. இவரது வலையில் விழுந்தவர்களில் பாளையங்கோட்டை ஆயுதப்படை பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றிய ராஜசேகரும் ஒருவர்.
கேடிசி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சிவகாசி ஜெயலெட்சுமியுடன் குடும்பம் நடத்தினார். இது குறித்து அவரது மனைவி தாட்சாயினிக்கு தெரிய வரவே அவர் ஐஜியிடம் புகார் செய்தார். அதையடுத்து ராஜசேகர் திண்டுகல்லுக்கு மாற்றப்பட்டார். பின்னர் திருச்சி ஆயுதப்படை எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார்.
அதன்பிறகு அவர் ஜெயலெட்சுமியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தினார். இதனால் தட்சாயினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ராஜசேகர், ஜெயலெட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் சப்-கோர்ட்டில் நடந்தது. இதில் இருவருக்கும் 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜசேகர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கீழ்கோர்ட் தீர்ப்பை ரத்து செய்தது.
இதையடுத்து ராஜசேகர் தன் மீது எந்த குற்றவழக்குகளும் நிலுவையில் இல்லை. எனவே மீண்டும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மனு கொடுத்தார். ஆனால் இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாவிட்டால் அவருக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டுமேன விதிமுறை உள்ளது. எனவே ராஜசேகருக்கு மூன்று மாதத்தில் தமிழக அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.