அடி வாங்கி கொழும்பு திரும்பிய இயக்குநர் பெரீஸ் உண்ணாவிரதம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ் மற்றும் சிங்களத்தில் படம் எடுத்துள இயக்குநர் துஷேரா பெரீஸ், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
தனது பட பிரிண்டுகளை எடுத்துச் செல்ல இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உதவ வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டத்தில் அவர் குதித்துள்ளார்.
சிங்கள இயக்குநர் பெரீஸ், தனது பிரபாகரன் படத்திற்கான பிரிண்டுகளைப் போட சென்னைக்கு வந்தார். இங்குள்ள ஜெமினி லேபில் அவர் பிரிண்ட் போட வந்திருந்தார். இதை அறிந்த இயக்குநர் சீமான், திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
தமிழர்களையும், தமிழர்களின் போராட்டத்ைதயும் இழிவுபடுத்தும் வகையில் படம் எடுத்துள்ள பெரீஸின் படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜெமினி லேப் முன்பு போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்களுடன் சமாதானம் பேச வந்த பெரீஸை சிலர் தாக்கி சரமாரியாக உதைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரும் அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் படத்தைப் பார்ப்பது எனவும், அதுவரை பிரிண்ட் போடக் கூடாது எனவும் முடிவானது.
இதையடுத்து பெரீஸ் கொழும்பு திரும்பி விட்டார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது படத்தின் பிரிண்டுகளைப் பெறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். சாப்பாட்டை நிறுத்தி விட்டேன். மருந்து, தண்ணீர் என எதையும் உட் கொள்ளவில்லை.
இந்திய, இலங்கை அரசுகள் எனக்கு உதவ வேண்டும். எனது படத்தின் பிரிண்டுகள் எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். என்னை மிகவும் மோசமாக அடித்து, பிரிண்டுகளைப் பறித்துச் சென்று விட்டனர்.
இப்படத்தில் யாரையும் நான் குற்றம் சாட்டவில்லை. தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அப்பாவி, ஏழைத் தமிழர்களும், சிங்களர்களும் இந்தப் போரினால் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனர், உயர்ந்த ஜாதி தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பதைத்தான் படத்தில் காட்டியுள்ளேன்.
ஆனால் நான் சொன்ன விளக்கத்தை என்னைத் தாக்கியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, காது கொடுத்துக் கேட்கவில்லை. இப்படத்தை நான் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்காக எடுத்துள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டினர். அது உண்மையல்ல.
இந்தப் படத்தைப் பார்க்க ராஜபக்சே விரும்பினார். அதைத்தான் நான் தெரிவித்திருந்தேன்.
அவர்கள் தாக்கியதில் எனது மூக்கு உடைந்து விட்டது. இன்னும் கூட ரத்தம் வந்து கொண்டுள்ளது. அடிக்கடி வாந்தியும் வருகிறது. முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கண்கள் இரண்டும் ரத்தச் சிவப்பாகியுள்ளது. ரத்தம் கட்டியுள்ளது என்று கூறியுள்ளார் பெரீஸ்.
முன்னதாக நிலைமை மோசமாக இருப்பதையடுத்து இந்திய அதிகாரிகள், பெரீஸை கொழும்பு திரும்பிச் சென்று விடுமாறு வற்புறுத்தவே அவர் கொழும்பு திரும்பியுள்ளார்.