நுழைவுத் தேர்வு-தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 3 மாணவர்கள் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த நுழைவுத்தேர்வு முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களும், கிராமப்புற மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வால் பாதிப்பு அடைந்து வந்ததால் நுழைவுத் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்தது.
பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதனால் கடந்த ஆண்டு பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மட்டுமே தொழிற் கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதன்மூலம் கூடுதலாக பல ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெற்றனர்.
ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதன் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் கருத்து தெரிவித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த பிரபு என்ற மாணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனுவில்,
மாணவர் சேர்க்கை நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இனாம்தார் வழக்கில் தீர்ப்பு கூறி உள்ளது. பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்களை சேர்ப்பதே நியாயமாக இருக்கும்.
நுழைவுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டதால் நுழைவுத் தேர்வு இல்லை என்ற மனநிலையில் மாணவர்கள் இருப்பதால் மீண்டும் நுழைவுத்தேர்வு எழுதச் சொன்னால் அது சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.
மீண்டும் புதிய வழக்குகள்:
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் நுழைவுத் தேர்வை எதிர்த்து மேலும் புதிய வழக்குகள் தாக்கலாகியுள்ளன.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவி முகிலா தேவி, வினோத்குமார், மனோ ஆபிரகாம் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றத்தில் இந்த புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நுழைவுத் தேர்வை ரத்து செய்தது சரி தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று அறிவித்து மீண்டும் நுழைவுத் தேர்வை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இன்று விசாரணை:
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி அப்தாப் அலாம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தன.
வழக்கு தொடர்ந்த மாணவி முகிலா தேவி சார்பில் ஆஜரான பாஜக தலைரும் மூத்த வழக்கறிஞருமான அருண் ஜேட்லி, தமிழக அரசு நடப்பு ஆண்டின் தனது நிலையை தெரிவிக்க வேண்டும் என்று வாதாடினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அர்ஜூனா மற்றும் காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி ஆகியோர், தமிழக அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை அங்கீகாரம் அளித்துள்ளன என்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கே.ஜி.பால கிருஷ்ணன், அப்தாப் அலாம் ஆகியோர் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் சிங்வி, அர்ஜூனா ஆகியோருக்கு உதவ தமிழக அரசின் முதன்மை கூடுதல் அட்வகேட் ஜெனரல் கண்ணதாசன் மற்றும் சிறப்பு அரசு பிளீடர் சங்கர் ஆகியோர் நேற்றே டெல்லி சென்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications