இந்திய எல்லையில் ஊடுறுவிய இலங்கை படகு பிடிபட்டது
ராமநாதபுரம்: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கைப் படகை கடலோரக் காவல் படையினர் துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் கடலோரக் காவல் படையினர் தினசரி காலையும், மாலையும் என இரு வேளைகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல இன்று காலையும் ஹெலிகாப்டரில் கடலோரக் காவல் படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். உச்சிப்புளி, தனுஷ்கோடி பகுதிகளில் இந்த ரோந்துப் பணி நடந்து கொண்டிருந்தது.
அப்போது தனுஷ்கோடி அருகே இலங்கை கடல் எல்லையிலிருந்து ஒரு படகு வேகமாக இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவிச் சென்றதைக் கண்டனர்.
இதையடுத்து அந்தப் படகை நெருங்கி தாழ்வாகப் பறந்தபடி, துப்பாக்கி முனையில் அந்தப் படகை மடக்கினர். பின்னர் அப்படகை அரிச்சமுனைக்குக் கொண்டு சென்றனர்.
படகில் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அவர்களைப் பிடித்த கடலோரக் காவல் படையினர் அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications