சோனியா காரைக்குடி வருகை: மிக பலத்த பாதுகாப்பு
காரைக்குடி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காரைக்குடி வருகை தந்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிதியமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினர் அவரது தந்தை பழனியப்ப செட்டியார் பெயரில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடிட்டோரியம் கட்டியுள்ளனர்.
இதை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கும் விழாவும் ரூ.60,000கோடி கடன்களை தள்ளுபடி செய்ததற்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் பேரணியும் காரைக்குடியில் நடந்தது.
இதில் பங்கேற்பதற்காகக சோனியா காந்தி டெல்லியிலிருந்து தனி விமானத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ராஜா, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சோனியா காந்தி காரைக்குடி புறப்பட்டுச் சென்றார்.
சோனியாவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் காரைக்குடியில் குவிந்துள்ளனர்.
அழகப்பா மெட்ரிகுலேசன் பள்ளி மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் சோனியா உரையாற்றுகிறார்.
சோனியாவின் வருகையையொட்டி தென் மண்டல ஐ.ஜி.சஞ்சீவ் குமார், டி.ஐ.ஜி. ராஜீவ்குமார் தலைமையில் சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை காரைக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்லும் சோனியா அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புவார்.