ஒலிம்பிக் தொடக்க விழா: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வர மாட்டார்!
நியூயார்க்: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டித் தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மேரி ஓகாபே கூறுகையில், பான் கி மூன் பெய்ஜிங் செல்லும் திட்டம் இல்லை. அவரது இந்த முடிவுக்கும், திபெத் போராட்டத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
தொடக்க விழாவின்போது வேறு சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே அவர் ஒப்புக் கொண்டுள்ளார். எனவேதான் ஒலிம்பிக் தொடக்க விழாவில் அவரால் பங்கேற்க இயலவில்லை. இதுகுறித்து 2 மாதங்களுக்கு முன்பே பான் கி மூன் சீனாவுக்கு தகவல் தெரிவித்து விட்டார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, அதாவது ஜூலை மாதத்தில் பான் கி மூன் சீனா செல்லவுள்ளார் என்றார் ஓகாபே.
பான் கி மூனின் முடிவு சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீனா ஒரு நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.