வரலாம், ஆனால் ஆக்கிரமிக்கக் கூடாது: மகா. முதல்வரின் அட்வைஸ்
மும்பை: வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மும்பைக்கு தாராளமாக வரலாம். அதேசமயம், சட்டவிரோதமாக பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வதை மகாராஷ்டிர மாநில அரசு அனுமதிக்காது என்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தேஷ்முக் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிற மாநிலங்களிலிருந்து மும்பைக்கு வருவோரை நாம் தடுக்க முடியாது. அதேசமயம், அவர்களால் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.
சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவோர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
மும்பை நகரின் அடிப்படைக் கட்டமைப்பை வெளிமாநிலத்தவர்கள் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது. அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
வெளிமாநிலத்தவர் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அரசு முயன்று கொண்டிருக்கிறது. அவர்களால் ஏற்படும் இட நெருக்கடி குறித்தும் அரசு கவலையுடன் கவனித்து வருகிறது.
மும்பையில் அதிக அளவில் குடிசைப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இதை குறைக்க, குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீட்டு வசதித் திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் குடிசைப் பகுதிகள் உருவாவதை தடுக்க முடியும் என்றார் தேஷ்முக்.