திஹார் சிறையில் பெண் கைதி நிர்வாணப்படுத்தி மானபங்கம்
டெல்லி: டெல்லி திஹார் சிறையில் பெண் கைதியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சிறை அதிகாரிகள் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பெண் கைதி வீணா. சிறையில் இவர் மானபங்கப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரை சிறை வார்டன்கள் மனரீதியாக தொல்லையும் கொடுமையும் செய்து வந்தனர். பொறுத்து பொறுத்துப் பார்த்த வீணா, தனக்கு நேரும் கொடுமைகளை மனுவாக எழுதி, அதை நீதிமன்றத்துக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார்.
இதையறிந்த சிறை அதிகாரிகள், வீணாவை தனி அறையில் அடைத்து வைத்தனர். அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். வீணாவை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து உச்சக்கட்ட கொடுமைகளை செய்துள்ளனர். மேலும் வீணா மனநலம் பாதிக்கப்பட்டவர், அவரது நடத்தை சரியில்லை என்று சித்தரிக்கும் வேலையிலும் சிறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். முதல்கட்டமாக வீணாவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மனநல மருத்துவரிடம் சான்றிதழும் பெற்றனர்.
இதுதொடர்பாக வீணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட சான்றிதழை நீதிபதியிடம் சிறை அதிகாரிகள் சமர்பித்தனர். அப்போது சிறையில் தான் அனுபவித்த கொடுமைகளையும், தன்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததையும் நீதிபதியிடம் வீணா அழுது கொண்டை கூறினார். இதனால் சிறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோ எடுத்த 3 சிறை வார்டன்களின் பெயரையும் வீணா தைரியமாக நீதிபதியிடம் கூறினார்.
இதையடுத்து, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வீணாவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி போலீசார் அந்த 3 சிறை வார்டன்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications