'அம்மா' பெயரை எப்படி சொல்லலாம்?: அதிமுக-திமுக மோதல்
சென்னை: சட்டசபையில் இன்று திமுக எம்எல்ஏ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதற்கு அதிமுகவினர் கடும் எதி்ர்ப்புத் தெரிவித்தனர்.
சட்டசபையில் இன்று உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போதுல் பேசிய திமுக உறுப்பினர் ராஜன்,
கடந்த ஆட்சியின் போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மேயராக இருந்த தளபதியின் (ஸ்டாலின்) பதவியை பறித்தார். எம்.எல்.ஏ. பதவி வேண்டுமா மேயர் பதவி வேண்டுமா என்பதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்யட்டும் என்று பேசினார் என்றார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அக் கட்சியின் எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில்,
'அம்மா'வின் பெயரை (ஜெயலலிதா) எப்படி உச்சரிக்கலாம்?. சட்டமன்ற மரபை காக்கும் வகையில் இரு தரப்பினரும் தலைவர்களின் பெயரை கூறக்கூடாது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள். எனவே ராஜன் தனது பேச்சில் குறிப்பிட்ட 'அம்மா' பெயரை நீக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: உள்ளாட்சித்துறை குறித்த விவாதம் என்றாலே கடந்த ஆண்டு கூட ஏதோ காரணம் கூறி வெளிநடப்பு செய்தீர்கள். இப்போது தேவையில்லாமல் பிரச்சனை எழுப்புகிறீர்கள். முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) எத்தனை முறை இங்கு கலைஞர் பெயரை உச்சரித்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): கடந்த முறை இந்த பிரச்சனை எழுந்தபோது முன்னாள் முதல்வர் என்று சொன்னாலே போதும் என்று இங்கு கூறப்பட்டது. எனவே தேவையில்லாமல் இப்படி பெயரை சொன்னால் நாங்களும் பதிலுக்கு பெயரை சொன்னால் தேவையில்லாத பிரச்சனை உருவாகும்.
அமைச்சர் துரைமுருகன்: அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்னையன் ஆயிரம் முறை கலைஞர் பெயரை உச்சரித்திருக்கிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அப்படி பேசியதில்லை. அதே நேரத்தில் ஒரு பெண் அமைச்சர் எப்படியெல்லாம் பேசினார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
ராஜன் (திமுக): கடந்த அதிமுக ஆட்சியின் போது 2 பேர் முதல்வராக இருந்தார்கள். எனவே முன்னாள் முதல்வர் என்று சொன்னால் ஓ.பன்னீர்செல்வத்தை சொல்வதாக தவறாக நினைத்து விடக்கூடாது என்பதால் தான் ஜெயலலிதா பெயரை உச்சரித்தேன்.
துணை சபாநாயகர்: ராஜன் குற்றச்சாட்டாக இதை சொல்லாததால் பெயரை (ஜெயலலிதாவின் பெயர்) அவை குறிப்பில் இருந்து அதை நீக்க முடியாது என்றார்.