சென்னையில் பிரமாண்ட பூங்கா உருவாக்கப்படும்-கருணாநிதி
சென்னை: பெங்களூரில் உள்ள லால்பாக், ஊட்டி தாவரவியல் பூங்காக்களைப் போல சென்னை நகரின் மையப் பகுதியில் 320 கிரவுண்ட் பரப்பில் அழகான, பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அண்ணா மேம்பாலம் அருகே இந்த பிரமாண்டமான உலகத் தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தற்போது உள்ள உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் உள்ள இடத்தில் இந்த பூங்கா அமையவுள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் உள்ளது. இந்த இடம் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமானது என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த இடத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த இடத்தில் உலகத் தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், உட்லண்ட்ஸ் டிரைவ் இன் உள்ள இடத்தில், 320 கிரவுண்டு பரப்பளவில் உலகத் தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
பெங்ளூரில் உள்ள லால்பாக் மற்றும் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கு நிகராக இந்த சென்னை தாவரவியல் பூங்கா எழிலுற அமைக்கப்புடம். உலகத் தரத்தில் இந்த பூங்கா அமையும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த இடத்தை மீட்டுத் தந்துள்ளது.
தாவரவியல் பூங்கா அமைக்க ரூ. 1000 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் மூலம் சென்னை நகரம் மேலும் அழகு பெறும் என்றார் கருணாநிதி.