பிரியங்கா சந்திப்பால் பூசல்: நளினி - முருகன் தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு
இதையடுத்து நேற்று முருகனும் தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியும், முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்துச் சென்றார். இதனால் முருகன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். நளினியை பிரியங்கா சந்தித்து (மார்ச் 19ம் தேதி) விட்டுச் சென்ற பின்னர், மார்ச் 22ம் தேதி முருகனை சந்தித்தார் நளினி.
அப்போது பிரியங்காவை சந்திக்க அனுமதி கொடுத்தது ஏன் என்று கோபமாக கேட்டாராம் முருகன். இதுதொடர்பாக இருவருக்கும் இடைேய கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. பின்னர் நேரம் முடிந்து விடவே இருவரும் பிரிந்துள்ளனர்.
ஏப்ரல் 5ம் தேதி இருவரும் மீண்டும் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் முருகன், நளினியை சந்திக்க மறுத்து விட்டாராம். இதனால் முருகனை நளினியால் சந்தித்துப் பேச முடியவில்லை.
முருகன் தன்னை சந்திக்க மறுத்ததால் பெரும் மன வேதனை அடைந்துள்ளாராம் நளினி. இந்த நிலையில் ஏப்ரல் 13ம் தேதி அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிைலயில் முருகனின் தாயார், தம்பி, தங்கை ஆகியோர் கடந்த 15ம் தேதி முருகனைப் பார்க்க வந்தனர். பின்னர் நளினியையும் பார்க்கச் சென்றனர். ஆனால் வயிற்று வலி காரணமாக அவர்களை பார்க்க இயலாது என்று கூறி விட்டாராம் நளினி.
இந்த நிலையில் நேற்று முருகன் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் சிறைக்கு நிருபர்கள் விரைந்தனர். ஆனால் முருகன் தற்கொலை முயற்சியை சிறைக் கண்காணிப்பாளர் நாராயணமூர்த்தி மறுத்தார். முருகன் நல்ல நலமுடன் இருக்கிறார். அவர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுவது வெறும் வதந்தி. யார் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.
நாளை சந்திப்பார்களா?:
இதற்கிடையே, 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ளும் முருகனும், நளினியும் நாளை சந்திக்க வேண்டிய நாளாகும். கடந்த முறை நளினியை சந்திக்க மறுத்தது போல இந்த முறையும் மறுப்பாரா அல்லது இம்முறை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒருவேளை நளினியை முருகன் சந்திக்க சம்மதித்தால், அந்த சந்திப்பின்போது கூடுதல் போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.