மலேசிய அரசிடம் மன்னிப்பு கோரியது மக்கள் ஓசை
கோலாலம்பூர்: தடை விதிக்கப்பட்ட மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசை, மலேசிய அரசிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மக்கள் ஓசை நாளிதழின் உரிமம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியானது. ஆனால் ஜூலை மாதத்திலேயே உரிமத்தை புதுப்பிக்கக் கோரி நாளிதழ் நிர்வாகம் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் கடிதம் அளித்திருந்தது.
ஆனால், மலேசிய அரசு உரிமத்தை புதுப்பிக்காமல் இழுத்தடித்து வந்தது. இருப்பினும் பத்திரிக்கை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது.
இந் நிலையில் நேற்று முன்தினம் இந்த நாளிதழுக்கு மலேசிய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உரிமத்தை புதுப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
மன்னிப்பு கோரியது:
இந் நிலையில், வழிகாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக மலேசிய அரசிடம் மக்கள் ஓசை மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நாளிதழின் பொது மேலாளர் பெரியசாமி கூறுகையில், அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். ஒரு வேளை எங்களது தரப்பில் ஏதாவது வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் மக்கள் ஓசை சார்பில் மன்னிப்பு கடிதமும், தடையை நீக்க வேண்டும் என்ற அப்பீல் கடிதமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பாரை சந்திக்கவும் மக்கள் ஓசை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக உள்துறை அமைச்சகம் மக்கள் ஓசை மீதான தடை குறித்துக் கூறுகையில், வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் ஓசை நாளிதழ் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தது.
1981ம் ஆண்டு முதல் தமிழ் ஓசை என்ற பெயரில் மக்கள் ஓசை நாளிதழ் வெளியாகி வந்தது. 2005ம் ஆண்டு முதல் இதன் பெயர் மக்கள் ஓசை என்று மாற்றப்பட்டது. கடந்த பொதுத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இப்பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகி வந்தன. இதனால்தான் அரசு கோபமடைந்து மக்கள் ஓசையின் உரிமத்தைப் புதுப்பிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.