பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்

சைவத்தையும், வைணவத்தையும் இணைத்து மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மிகவும் விசேஷமானது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடந்தது.
தங்கை மீனாட்சியின் கல்யாணத்தைக் காண கள்ளழகர் வேடம் பூண்டு அழகர்கோவிலிருந்து புறப்படும் அழகர் பெருமான், தான் வருவதற்குள் கல்யாணம் நடந்து முடிந்து விடுவதால் கோபம் கொண்டு ஆற்றில் இறங்குவதாக ஐதீகம்.
இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வழக்கம் போல விமரிசையாக நடந்தது.
நேற்று முன்தினம் மதுரைக்குப் புறப்பட்ட கள்ளழகருக்கு வழியெங்கும் உள்ள மண்டகப் படிகளில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை எதிர்கொண்டழைத்து வந்தனர்.
தல்லாகுளம் சுந்தரராஜப் பெருமாள் கோவில் விடிய விடிய திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.
இன்று அதிகாலை தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் பெருமான் புறப்பட்டார். கருப்பண்ணசாமி கோவிலில் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் வைகை ஆற்றுக்கு வந்தார் அழகர். காலை 7.05 மணியளவில் வைகை ஆற்றில் அழகர் இறங்கினார்.
பச்சைப் பட்டுடுத்தி இன்று அழகர் ஆற்றில் இறங்கினார். பச்சைப் பட்டு உடுத்தியிருந்ததால், இந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்தோங்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆற்றில் இறங்கிய அழகர் பெருமான் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டும் பக்தர்கள் அழகரை வழிபட்டனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மதுரை கலெக்டர் ஜவஹர், மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கினர்.












Click it and Unblock the Notifications