கர்நாடகம்- காங். தலைவரின் ஹெலிகாப்டர் பறிமுதல்
குல்பர்கா: தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி தேர்தல் பிரசாரப் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட கர்நாடக மாநிலகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பைலட்டும் கைது செய்யப்பட்டார்.
கார்கே உள்ளிட்டோருடன் அந்த ஹெலிகாப்டர், குல்பர்கா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்கியது. ஆனால் முன்கூட்டியே இதற்குரிய அனுமதியை பைலட்டோ அல்லது காங்கிரஸ் தரப்போ பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. மனீஷ் கபீர்கரிடம், ஆயுதப்படை டி.எஸ்.பி. புகார் கொடுத்தார். அவர் நேரடியாக ஸ்பாட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார். பைலட் அசோக் மஹந்த்திடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான பங்கஜ்குமார் பான்டேவிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் அனுமதி பெறாமல் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக பைலட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். ஹெலிகாப்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மஹந்த் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி ஏப்ரல் 28ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த ஹெலிகாப்டர் எஸ்கார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். தேர்தல் பிரசாரம் தொடர்பாக பெங்களூரிலிருந்து இந்த ஹெலிகாப்டர் மூலம் கார்கே குல்பர்காவுக்கு வந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் அல்லம் பிரபு பாட்டீல், மத்திய வருவாய்த்துறையிடம் முறையாக அனுமதி பெற்றுத்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்தினோம் என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை மீட்க மாவட்ட நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.