எம்.பி. தொகுதி நீக்கத்தை எதிர்த்து பந்த்: புதுக்கோட்டை ஸ்தம்பிப்பு
தொகுதிகள் மறு சீரமைப்பின்போது புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டு விட்டது. இந்த தொகுதியில் இடம் பெற்றிருந்த புதுக்கோட்டை, குளத்தூர், அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கரூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன.
இதை கண்டித்து அனைத்து அரசியில் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தொகுதி மீட்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சார்பில் 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
முதல் கட்டமாக பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு 5 லட்சம் தபால் கார்டுகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2வது கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந் நிலையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த புதுக்கோட்டை தொகுதி மீட்பு குழு அழைப்பு விடுத்தது. இதற்கு மாவட்ட வர்த்தக கழகம், ஹோட்டல் அதிபர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், வாடகை கார் உரிமையாளர் சங்கம் மற்றும் அனைத்து தன்னார்வ அமைப்புகள், வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
இன்று காலை பந்த் தொடங்கியது. அதை ஏற்று இன்று காலை முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.
இதனால் புதுக்கோட்டையில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது.
போராட்டம் குறித்து போராட்டக் குழுத் தலைவர் சேவியர் கூறுகையில், எங்களது இந்த மூன்றாவது கட்டப் போராட்டத்திற்கும் தேர்தல் ஆணையம் செவி சாய்க்கவில்லை என்றால் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
பந்த்தையொட்டி புதுக்கோட்டை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பால் விநியோகம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு இந்த பந்த்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததால் அவற்றி்ன் வினியோகம் பாதிக்கப்படவில்லை.