ரகுவண்ணனுக்கு போதை பழக்கம்-ஸ்டெபி பரபரப்பு
சென்னை: இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனுக்கு போதைப் பழக்கம் இருந்ததாகவும், தன்னிடம் பழக ஆரம்பித்த பின்னர்தான் அதிலிருந்து மீண்டு வந்தார் என்று கூறியுள்ளார் அவரை ரகசியமாக திருமணம் செய்ததாகக் கூறப்படும் ஸ்டெபி.ஸ்டெபியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ள போலீஸார் அடுத்ததாக ரகுவண்ணனிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
பெண் உதவி இயக்குநர் ஸ்டெபி, சமீபத்தில் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் ரகுவண்ணன் மற்றும் மணிவண்ணன் குடும்பத்தினர் மீது புகார் கூறினார். ரகுவண்ணன் தன்னைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டு குடித்தனம் நடத்த மறுப்பதாகவும், மணிவண்ணன் குடும்பத்தினர் மிரட்டுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். அதன்படி வரதட்சணை ஒழிப்புப் பிரிவு உதவி ஆணையர் முத்தமிழ் மணி, எஸ்.ஐ. சாந்தி ஆகியோர் அடங்கிய தனிப்பிரிவு போலீஸார் ஸ்டெபியிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தார் ஸ்டெபி. தானும், ரகுவண்ணனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் போலீஸில் ஒப்படைத்தார்.
போலீஸாரிடம் ஸ்டெபி கூறுகையில், என்னை விரட்டி விரட்டி காதலித்தார் ரகுவண்ணன். நான் முதலில் அவரது காதலை ஏற்கவில்லை. இந்த நிலையில் தனது கையை கத்தியால் கீறிக் கொண்டார். மேலும் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறினார். இந்த நிலையில்தான் ரகுவண்ணனின் அக்கா, ஜோதி என்னை அணுகி ரகுவின் காதலை ஏற்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்தே நான் ரகுவின் காதலை ஏற்றுக் கொண்டேன்.
நாங்கள் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டது ஜோதிக்கும் தெரியும். ஜோதிக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தனக்கு திருமணம் ஆன பின்னர் உங்களது திருமணத்தை ஊரறிய நடத்தி வைக்கிறன் என்று என்னிடம் கூறியிருந்தார்.
இதனால்தான் நான் ரகுவுடன் நெருங்கிப் பழகினேன். ரகசியத் திருமணமும் செய்து கொண்டேன்.
முன்பு ரகுவண்ணனுக்கு போதைப் பழக்கம் இருந்தது. என்னிடம் பழக ஆரம்பித்த பின்னர்தான் அதிலிருந்து மீண்டு வந்தார் என்று கூறியுள்ளார் ஸ்டெபி.
இதைத் தொடர்ந்து ஜோதி, ரகுவண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில், ரகுவண்ணன், ஸ்டெபி நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ரகுவின் நெருங்கிய நண்பர் ஒருவர்தான் படம் பிடித்துள்ளதாக ஸ்டெபி தெரிவித்துள்ளார். எனவே அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.