இணையத்தளத்தில் டிஎன்பிஎஸ்சி முடிவுகள் வெளியீடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
முதல் முறையாக மதிப்பெண் பட்டியலுடன் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (http://www.tnpsc.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரி அதிகாரி உள்ளிட்ட நேரடி உயர் பணிகளுக்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆகஸ்டு மாதம் மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம், 30 துணை கலெக்டர்கள் (ஆர்டிஓ), 32 போலீஸ் டிஎஸ்பிக்கள், 45 வணிக வரி அதிகாரிகள், 24 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 2 மாவட்ட பதிவாளர்கள், 29 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள், 7 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், 3 கோட்ட தீயணைப்பு அதிகாரிகள் ஆகிய 172 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 85,913 பேர் தேர்வெழுதினார்கள். இதில் 1,796 வெற்றி பெற்றுள்ளனர். ஒரு பணி இடத்திற்கு 10 பேர் என்ற விகிதத்தில் முக்கிய தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-1 முதல்நிலை தேர்வு மதிப்பெண் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் தேர்வு எண்ணை குறிப்பிட்டால் மதிப்பெண் விவரம் தெரிவிக்கப்படும். மேலும் கட் ஆப் மதிப்பெண் விவரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: (மொத்தம் 300 மார்க்கிற்கு தேர்வு நடத்தப்பட்டது)
ஓ.சி. பொது - 210, மகளிர்- 195
பி.சி. பொது - 201, மகளிர் - 187.50
எம்.பி.சி. - பொது - 196.50, மகளிர் - 180
எஸ்.சி. - பொது - 195 மகளிர் - 178.50
எஸ்.டி. - பொது - 156 மகளிர் - காலி இடம் இல்லை
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் ஏ.எம்.காசிவிஸ்வநாதன் கூறுகையில், தேர்வு முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தேர்வு எழுதியவர்கள் தங்கள் நிலையை தெரிந்து கொண்டு இனிவரும் தேர்வுகளுக்கு நன்கு படிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாட்டினை செய்யப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தகவல் அனுப்பப்படும். மெயின் தேர்வு 2 பொது அறிவு தாள்களைக் கொண்டது. பொது அறிவு முதல் தாள் ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பொது அறிவு தாள்- 2 17ம் தேதியும் நடத்தப்படும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 300 மதிப்பெண்கள். நேர்முகத் தேர்வுக்கு 80 மதிப்பெண்கள்.
தற்போதைய குரூப்-1 தேர்வுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட பின்னர் அடுத்த குருப்-1 தேர்வு குறித்து அறிவிக்கப்படும். மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) தேர்வு விரைவில் வெளியிடப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.