ஆப்கன் அதிபர் கர்ஸாயைக் கொல்ல முயற்சி

தலைநகர் காபூலில், கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த 16வது ஆண்டையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கர்ஸாய், அமைச்சர்கள், முன்னாள் வீரர்கள், தூதரக அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென தலிபான் தீவிரவாதிகள் அங்கு அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். 21 துப்பாக்கிகள் முழங்க கர்ஸாய் அணிவகுப்பை பார்வையிட்டு முடித்த பின்னர் இந்தத் தாக்குதல் தொடங்கியது.
முதலில் ஒரு குண்டுவெடித்தது. இதனால் அங்கு பெரும் புகை மண்டலம் எழுந்தது. பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து நாலாபுறமுமிருந்து துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர் தீவிரவாதிகள்.
விழா நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் உள்ள உயரமான கட்டடத்திலிருந்து தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கர்ஸாய் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தங்களது தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுபோன்ற தாக்குதல் தொடரும் எனவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
தாக்குதலிலிருந்து தப்பிய கர்ஸாய் பின்னர் டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், இன்று ஆப்கானிஸ்தானின் எதிரிகள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பின் எதிரிகள், நமது விழாவைக் குலைக்க முயற்சித்தனர். பயங்கரவாதத்ைத பரப்ப அவர்கள் முயன்றனர்.
ஆனால் ஆப்கனின் பாதுகாப்புப் படையினர் அனைவரையும் தடுத்து அவர்களது நோக்கத்ைத சிதறடித்து விட்டனர் என்றார் அவர்.
தலிபான் கொட்டம் அடக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், காபூலில் கர்ஸாயைக் குறி வைத்து நடந்துள்ள இந்த பயங்கர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காபூல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
--












Click it and Unblock the Notifications