தமிழகத்தில் 1.6 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகளில் 35 லட்சம் ரேஷன் கார்டுகள் போலி என்று எல்காட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,979 போலி கார்டுகள் உள்ளன.
இதை கண்டுபிடிக்கும்போது நியாயமாக கார்டு வைத்திருப்போரும் பாதிப்பார்களே. இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் 286 பணியாளர்களை வைத்து எப்படி போலி கார்டுகளை கண்டுபிடிப்பீர்கள். போலி கார்களை தடு்க்க பெருவிரல் ரேகையை அடையாளமாக பதிய வைத்து கொடுக்க முடியுமா என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு, கடந்த மார்ச் 31 வரை தமிழ் நாட்டில் 1 கோடியே 97 லட்சத்து 47,517 கார்டுகள் உள்ளன. கடந்த 2004-05ல் விடுபட்டவர்களுக்கு 36.59 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. 2வது கட்டமாக மேல்முறையீட்டு மனுக்கள் மீது 2.93 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டன.
2005ல் 1.49 கோடி கார்டுகள் புதுப்பிக்கப்பட்டன. இவை எல்லாம் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டிருந்தன.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இவற்றையெல்லாம் சாப்ட்வேர் மூலம் ஒருங்கிணைத்தோம். அப்போது ஒரே எண்ணில் பல அட்டைகள் இருப்பதும், ஒரே குடும்பத்தில் 4, 5 அட்டைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
34 லட்சத்து 51,312 கார்டுகள் போலி ரேஷன் கார்டு இருப்பதி தெரிய வந்தது. தாலுகா வாரியாக தனித்தனி சி.டி.க்களாக பிரித்து முகவரி எடுக்கப்பட்டது. அதை வைத்து வீடு வீடாக சோதனை செய்ய அரசு உத்தரவிட்டது.
கடந்த 11ம் தேதி வரை 30,05,217 வீடுகளில் சோதனை செய்ததில் 69,770 போலி கார்டுகளை கண்டுபிடித்து நீக்கினோம். கடைகளில் நடந்த விசாரணையில் 96,520 அட்டைகள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,66,290 போலி கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசுக்கு 33.25 கோடி மிச்சமானது. எல்காட் நிறுவனம் கண்டுபிடித்த அத்தனையும் போலி என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் 3 கோடி போலி ரேஷன் கார்டுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் சமீபத்தில் கூறி இருந்தார். இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
பரிசோதனை முறையில் இரண்டு இரண்டு மாவட்டங்களாக ஆய்வுக்கு எடுத்து முழுமையாக போலி அட்டைகளைக் களைய ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்க வேண்டிய பணியும் உள்ளது. எனவே இதில் போலியான ரேஷன் கார்டுகள் வராத அளவுக்கு கை ரேகைகளை பதிவு செய்யலாமா அதைவிட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டுகளை வழங்கலாமா என்பது முடிவு செய்யப்படும்.
போலி அட்டைகளை வழங்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது என்றார் வேலு.