வாலிபர் கத்தியால் குத்து கொலை-நண்பர் கைது
சென்னை: பணத்துக்காக நண்பரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகர் சீரணி நகரில் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பாண்டி பஜார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், போலீசார் அங்கு சோதனை செய்தபோது பெருச்சாளி இறந்துக் கிடந்தது. அதனால்தான் நாற்றம் வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால் அங்கு தொடர்ந்து துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேந்திரனும், அவரது மனைவி உமாமகேஸ்வரியும் போலீசில் தங்களது மகன் கார்த்திக்கை (19) காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.
துர்நாற்றம் வீசுவதாக கூறப்பட்ட வீட்டில் வசித்த சுந்தரமூர்த்தி, கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் என்றும், அந்த வீட்டுக்கு வெளியில் கார்த்திக்கின் செருப்பு இருப்பதாகவும் போலீசில் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த வீட்டை மீண்டும் சோதனை செய்தனர். அப்போது சுவற்றில் ரத்தக் கறைகள் இருந்தது. மூலையில் கிடந்த சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சாக்குப் பையை திறந்து பார்த்தபோது கார்த்திக்கின் உடல் அழுகிக் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை பார்த்த கார்த்திக்கின் பெற்றோர் கதறி அழுதனர்.
போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் கார்த்திக்கின் பெற்றோரிடம் விசாரித்தனர். விசாரணையில்,
கார்த்திக் பிளஸ் 2 படித்துவிட்டு முகப்பேரில் உள்ள தனியார் வங்கியில், கடன் வசூல் செய்யும் ஏஜெண்டாக கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்துள்ளார்.
தினமும் வசூல் பணத்தை வங்கி கிளையில் கட்டி விட்டு சுந்தரமூர்த்தியை பார்க்க செல்வார். சுந்தரமூர்த்திக்கு பெற்றோர் கிடையாது. சுந்தரமூர்த்தியும், பாரில் வேலை செய்யும் அவரது நண்பர் பரந்தாமன், கார்த்திக் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவார்களாம்.
இதையடுத்து பரந்தாமனின் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு தனிப்படையினர் போலீசார் விரைந்தனர். அங்கு அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், கடந்த 24ம் தேதி இரவு சுந்தரமூர்த்தி, பரந்தாமன், கார்த்திக் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். கார்த்திக் வைத்திருந்த வங்கி பணம் ரூ.5,000 கொள்ளையடிக்க பரந்தாமனும், சுந்தரமூர்த்தியும் திட்டமிட்டுள்ளனர்.
கார்த்திக்கை கட்டையால் அடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் சாக்கு பையில் கட்டி வைத்து விட்டு வீட்டையும் பூட்டிவிட்டு தப்பினர். பதிலுக்கு கார்த்திக் தாக்கியதில் பரந்தாமனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதையும் காண்பித்தார்.
கொள்ளையடித்த பணத்தில் தன்னிடம் ரூ.1,000 மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்துடன் சுந்தரமூர்த்தி சென்றுவி்ட்டதாக பரந்தாமன் கூறினார். சுந்தரமூர்த்தியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த 24ம் தேதி வசூல் பணத்தை கட்டவில்லை என்றும் கார்த்திக்கை காணவில்லை என்றும் வங்கி தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications