காஸ் விவகாரம்: பதவி விலக மாட்டேன் - டி.ஆர்.பாலு
டெல்லி: எனது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காஸ் வழங்கிய விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே இதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசுகையில், நாங்கள் சேது சமுத்திரத் திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தீவிரமாக உள்ளேன்.
இதன் காரணமாகவே பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், காஸ் விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்தி என்னை ராஜினாமா செய்ய வைக்க முயன்று வருகின்றன.
ராஜ்யசபாவில் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் என் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. அவர் இந்த அளவுக்கு கீழே போவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்களில் எனது குடும்ப உறுப்பினர்களும் சிலர். அவர்களது பிரச்சினை குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் எடுத்துக் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார் பாலு.
நாடாளுமன்றத்தில் இன்று அரசு விளக்கம்:
இதற்கிடையே, டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா இன்று நாடாளுமன்றத்தில் விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், இதுதொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்வார் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்களை பிரதமர் அலுவலகம், எனது துறைக்கு 'பார்வர்ட்' செய்ததில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
பாலு உறவினர்களுக்கு காஸ் சப்ளை செய்யுமாறு எனது துறைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. மாறாக, அந்த நிறுவனங்கள் அனுப்பிய கடிதங்களை எனது துறைக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது, அவ்வளவுதான் என்றார் தியோரா.












Click it and Unblock the Notifications