விமானத்தில் போதையில் ரகளை-திருப்பி அனுப்பப்பட்ட மலேசிய தமிழர்
சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் குடித்துவிட்டு ரகளை செய்த 3 பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர். ஒரு பயணி மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
மலேசியாவில் இருந்து நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த சேகர் (39), மலேசியாவை சேர்ந்த சூடாமணி குணசீலன் (44) சுப்பிரமணியம் மணிவேலன் (40) ஆகியோர் வந்தனர்.
விமானத்தில் இந்த 3 பேரும் குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டே வந்தனர். இத்தனைக்கும் குணசீலனின் மனைவியும் விமானத்தில் உடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் சென்னையில் தரையிறங்கியதும் மூவரும் குடியுரிமை பிரிவு அதிகாரிகளிடமும் ரகளை செய்தனர்.
இதையடுத்து சேகரை விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
குணசீலன், மணிவேலன் ஆகியோரை திருப்பி மலேசியாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.
குணசீலன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் விமானத்தில் அவரை ஏற்ற விமானி மறுத்து விட்டார். இதனால் அவர் விமான நிலைய போலீசாரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டார்.
அதே விமானத்தில் மணிவேலனை திருப்பி அனுப்பப்பட்டார்.
வயிற்று வலிக்கு வந்தாராம்...:
குணசீலன் வயிற்று வலி நோய்க்கு சிகிச்சை பெற சென்னை வந்ததாக அவரது மனைவி கோகிலாவாணி கூறினார். கணவரை கைது செய்து சிறையில் அடைத்தால் சிகிச்சை பெற முடியாது என அவர் கதறி அழுதார்.
இதையடுத்து குணசீலனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் அதை கோர்ட்டில் சந்தித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications