வழக்கு இழுத்தடிப்பு: நீதிபதி, காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: ஒரு கொலை வழக்கை எட்டு ஆண்டுகள் இழுத்தடித்த திருவண்ணாமலை செஷன்ஸ் நீதிபதிக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இந்திராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது தந்தை கடந்த 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் பெரும் செல்வாக்கு உடையவர்கள் என்பதால் அவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக திருவண்ணாமலை நீதிமன்றம் சரிவர விசாரிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே வழக்கு விசாரணையை விரைவாக நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்திராணியின் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், திருவண்ணாமலை செஷன்ஸ் நீதிபதிக்கும், காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி ஜெயபால் தனது உத்தரவின்போது, இந்த வழக்கை அப்படியே மூடி மறைப்பதற்கு அத்தனை பேரும் முயன்றுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
1995ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி கொலை நடந்துள்ளது. குற்றப்பத்திரிக்கை 1997ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தாக்கல் செய்துள்ளனர். குற்றம் குறித்து விசாரிக்க மேலும் 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது நீதிமன்றம்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது.
நீதிமன்றமும், காவல்துறையும் நடந்து கொண்ட விதம் மிகவும் வருத்தம் தருகிறது.
இந்த வழக்கை ஒரே மாதத்தில் திருவண்ணாமலை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும். அதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் நீதிபதி ஜெயபால்.












Click it and Unblock the Notifications