கோடியக்கரை கடலில் சூறாவளி: புழுதிப் புயல்-மீனவர்கள் பீதி
வேதாரண்யம், கோடியக்கரையில் மே, ஜூன் மாதங்களில் காற்று பலமாக வீசும். இதற்கு விசாக காற்று என்று அப்பகுதி மக்கள் பெயர் வைத்துள்ளனர். அச்சமயங்களில் கடலில் பலத்த காற்று வீசும். கடல் கொந்தளிப்பும் ஏற்படும்.
இந்த ஆண்டும் கோடியக்கரையில் நேற்றிரவு முதல் பலத்த சூறாவளி கற்று வீசியது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இரவு நேரத்தில் பேரிரைச்சலுடன் எழுந்த அலைகளால் கடலோரங்களில் காணப்படும் சதுப்பு நில காடுகளில் கடல்நீர் புகுந்தது.
முத்துப்பேட்டையில் தொடங்கி கோடியக்கரை வரையும் இடைப்பட்ட அகஸ்தியம் பள்ளி போன்ற இடங்களில் உள்ள கடலோர கிராமங்களில் கடல் சூறாவளி காற்றால் புழுதி காற்று வீசியது.
இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இன்று காலை வரை பலத்த காற்று நீடித்தது. இதன் காரணமாக மின்சாரமும் தடைபட்டது.
தன்பாடு என்ற இடத்தில் உள்ள உப்பள பகுதிகளையும் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் உப்பளங்கள் பாதிப்புக்குள்ளாயின. கடந்த ஒரு வாரமாக கடலில் மட்டும் வீசிய பலத்த காற்று கடலோர கிராமங்களிலும் தரையோரமாக வீசி புழுதியைக் கிளப்பியது.
இதனால் விளம்பர போர்டுகள், நாட்டு படகுகள், விசை படகுகள் ஆகியவை சேதம் அடைந்தன. இதனால் பீதியடைந்த மீனவர்கள் பயந்து போய் ஓட்டம் பிடித்தனர்.
ஏற்கனவே கடல் பகுதியில் சூறாவளி வீசி வருவதால் சேது சமுத்திர திட்ட பணியில் உள்ள கப்பல்கள் முத்துப் பேட்டையில் கரை ஒதுங்கின.
இந்த நிலையில் தொடர்ந்து கடற்காற்று நீடித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடல் சூறாவளியால் கோடியக் கரை- தொண்டியக் காடு சிறுதலைகாடு, தில்லைவலம் உள்பட மீனவ கிராமங்களையும் கடல் தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் இக்கிராமங்களில் உள்ள மீனவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.
தற்போது மீனவர்கள் ஆழ் கடலுக்குப் போய் மீன் பிடிக்க தடை உள்ளது. எனவே கடலோரம்தான் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். ஆனால் தற்போது வீசி வரும் கடல் சூறாவளியால் அதுவும் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
நர்கீஸ் புயல் சின்னம் வங்கக் கடலில் இன்னும் நிலை கொண்டிருப்பதால் ராமேஸ்வரம் முதல் தமிழக கடல் பகுதிகளில் கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கோடியக்கரை கடல் பகுதியிலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிகிறது.