பிரசவத்தின்போது பெண் பலி - உறவினர்கள் போராட்டம்
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்தின்போது பெண் பலியானார். இதையடுத்து மருத்துவமனையைத் தாக்கி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஒரு பிளம்பர். இவரது மனைவி ஆனந்தி (20). கல்யாணமாகி ஒன்றரை வருடங்களாகிறது.
கர்ப்பமாக இருந்த ஆனந்தியை பிரசவத்திற்காக தண்டையார்பேட்டையில் உள்ள நேதாஜி நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு சிசேரியன் மூலம் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆனந்தி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சேர்த்த பின்னரும் ஆனந்திக்கு உதிரப் போக்கு நிற்கவில்லை. இந்த நிலையில் ஆனந்தி உயிரிழந்தார்.
இதைக் கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் நேதாஜி மருத்துவமனை முன்பு திரண்டனர். மருத்துவமனையை அடித்து தாக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் அதன் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications