சென்னை வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து
சென்னை: சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள பழமையான வணிக வளாகத்தில் இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் எதிரே உள்ள மாண்டியத் சாலையில் உள்ளது சிசன்ஸ் காம்ப்ளக்ஸ் எனப்படும் வணிக வளாகம். இந்தப் பகுதியில் நிறுவப்பட்ட முதல் வணிக வளாகம் இதுதான்.
5 மாடிகளைக் கொண்ட மிகவும் பழமையான இந்த வளாகத்தில் மேலே உள்ள 3 தளங்களில் குடியிருப்புகளும், கீழே உள்ள 2 தளங்களில் வணிக நிறுவனங்களும் இருக்கின்றன.
மிகவும் பழையான இந்தக் கட்டடம் ஆங்காங்கே பெயர்ந்து போய்க் காணப்படுகிறது. இதனால் இதை பராமரிப்பு செய்ய வேண்டும் என இங்குள்ளவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் அதை கட்டட உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் தரைத் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அது அப்படியே 5வது மாடிக்குப் பரவியது. இதனால் பெரும் புகை மூட்டம் எழுந்தது. மின்சாரக் கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஐந்து பெண்கள் மயக்கமடைந்தனர். அவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்புடைய கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து போய் விட்டன. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications