உத்தபுர சுவர் உடைப்பு: தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுதாரணம்-காரத்
மதுரை: உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது, தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுதாரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் கடந்த 1989ம் ஆண்டு இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுமார் 40 அடி நீளத்தில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.
அந்த சுவரை இடிக்கக் கோரி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து நேற்று அங்கு சென்ற அதிகாரிகள், அதிரடியாக சுவரின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளினர்.
இந் நிலையில் இந்த சுவரை எதி்ர்த்து முன்னி்ன்று போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் இன்று அந்த இடத்தை பார்வையிட்டார்.
பிரகாஷ் காரத்துக்கு ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளி்த்தனர். அப்போது பேசிய காரத், உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டது தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுதாரணமாகும். மாநிலம் முழுவதும் இதே போன்ற தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து ஒரு பிரிவினர் இன்றும் மலையில் வாசம் செய்யும் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்பகுதியில் இன்றும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications