சோதனை வெற்றி எதிரொலி-ராணுவத்தில் இணைகிறது அக்னி-3
டெல்லி: அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி-3 ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்படும் தகுதியைப் பெற்றுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் மிரட்டலுக்குப் பதிலடியாக உருவாக்கப்பட்டுள்ளதாக வர்ணிக்கப்படும் அக்னி-3 ஏவுகணை நேற்று காலை ஒரிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து ஏவப்பட்டது. முதலில் இந்த சோதனை வெற்றிகரமானதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால் விரிவான ஆய்வுக்குப் பின்னர் சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
3500 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கித் தகர்க்கக் கூடிய திறமை அக்னி-3க்கு உள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறனும் இதற்கு உண்டு.
இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்திற்கு (டி.ஆர்.டி.ஓ) இது பொன் விழா ஆண்டு. இந்த ஆண்டில் அக்னி-3 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருப்பது மிகப் பெறும் நிகழ்வாக கருதப்படுகிறது.
மேலும், உலக அளவில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டுள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் பெருமைமிகு இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் தேசியப் பாதுகாப்பு மேலும் வலுப் பெற்றுள்ளது.
அக்னி-3 ரக ஏவுகணை சோதனையில் நேற்று நடந்தது 3வது சோதனையாகும். முதல் சோதனை 2006ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி வீலர் தீவில் நடந்தது. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. 2வது சோதனை கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி அதே வீலர் தீவில் நடந்தது. இதில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் நேற்றைய சோதனையில் 100 சதவீத வெற்றி கிடைத்துள்ளது.
நேற்றைய சோதனையின்போது அக்னி-3 ஏவுகணை ஏவிய 13 நிமிடங்கள் 20 விநாடிகளில் இலக்கைத் தாக்கியது. அக்னி-3 ஏவுகணை இலக்கைத் தாக்கியதை இரண்டு கடற்படைக் கப்பல்கள் கண்காணித்தன. விநாடிக்கு 4000 மீட்டர் வேகத்தில் ஏவுகணை சென்றது. 350 கிலோமீட்டர் உயரம் சென்று இலக்கைத் தாக்கியது.
அக்னி-3 ஏவுகணை 200 கிலோ தெர்மோ அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக் கூடிய திறன் படைத்தது.
இந்த வெற்றிகரமான பரிசோதனையின் மூலம் பாதுகாப்புப் படையில் சேரும் தகுதியை அக்னி-3 பெற்றுள்ளது என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications