குற்றாலம் பூங்காவில் கண்கவர் கொரியன் புல் தரை
தென்காசி: குற்றாலம் பேரூராட்சி பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்கவர் கொரியன் புல் தரையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் அருவிகளுக்கு அடுத்தப்படியாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடமாக பூங்காக்கள் உள்ளன. மெயின் அருவி பூங்கா, பேருந்து நிலையம் அருகில் உள்ள விசுவநாதராவ் பூங்கா இரண்டும் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காக்களில் தற்போது பசுமையான மலர் செடிகளோ, புல் தரைகளோ இல்லை. சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழும் ஊஞ்சல்கள், சீசா பலகை போன்ற விளையாட்டு சாதனங்களும் பழுதடைந்துள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு குளுகுளு சீசன் முன்னதாக துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.
இதையடுத்து நிலையில் சுற்றுலா பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பூங்காக்களை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி விசுவநாதராவ் பூங்காவில் உள்ள சிலைகள் ரூ.2..5 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. மேலும் ரூ.3 லட்சம் செலவில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு வசதியாக பூங்காக்களில் கொரியன் மற்றும் சாதாரண புல் தரைகள் அமைக்கப்பட உள்ளது.
இது தவிர ரூ.1 லட்சம் செலவில் பூங்காக்களில் மெல்லிசை ஒலி பரப்பும் நவீன ஸ்பீக்கர்களும் பொருத்தப்படுகிறது.
இதனால் இந்தாண்டு குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மூலிகை அருவிகளில் குளிப்பதால் உடல் ஆரோக்கியத்துடன், பூங்காக்களில் மனஅமைதியையும் பெற்றுச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications