உத்தரபிரதேசத்தில் புழுதி புயலுக்கு 89 பேர் பலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெய்த பலத்த மழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 89 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
உத்தர பிரதேச மாநில மேற்கு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்துவருகிறது. இத்துடன் பலத்த புழுதி காற்றும் வீசி வருகிறது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் விழுந்தன. பல இடங்களில் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
அப்பகுதிகளில் தகவல் தொடர்பு முற்றிலுமாக முடங்கியது. லக்னோ உள்பட பல பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
புழுதி காற்று மற்றும் கன மழையின் கோர தாண்டவத்துக்கு 89 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கன்னாஜ் மாவட்டத்தில் 14 பேரும் இடாவா பிரோஸாபாத் மாவட்டங்களில் தலா 10 பேரும் கான்பூர், திஹார் மாவட்டங்களில் தலா 9 பேரும் பலியாயினர்.
பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.